திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்கான அனைத்து உடைமைகளையும் எடுத்து தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். அவன் ரயில் ஜன்னலை குனிந்து பார்த்தவாறே நடை மேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து எனக்கு எதிர் திசையில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன். அமர்ந்தான். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. எத்தனையாவது படிக்கிற என்றேன். 11 வது என்றான்.
திருநெல்வேலின்னா உடனே உனக்கு என்னென்னலாம் ஞாபகம் வரும்னு கேட்டேன்.
அல்வா என்றான்.
இந்த பதில் மனிதனுக்கு முதல் தேவை உணவு என்பதைப் போல் இருந்தது. எவ்வுயிரினத்திற்கும் அடிப்படை உணவு. ஆனால் மனிதனுக்கோ அது சுவையோடு பிண்ணிப் பிணைந்தது. உணவுக் கலை ஒன்றே மனிதனோடு காலந்தோறும் கூடவே வருவது. ஓர் உணவு ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் என்கிற வகையில் அவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது எனில் அது உலகளவில் கவனம் பெறக்கூடிய நிலையை அடைகிறது. மற்றும் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு சேர்க்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பது நம்முடைய கடமையாகவும் மாறிவிடுகிறது.
சரி அப்புறம்... என்றேன்.
தாமிரபரணி என்றான்.
பொருநையாம் தாமிரபரணி. ஆற்றங்கரை நாகரீகத்தின் ஆதித் தமிழரின் தொல்லெச்சங்களை தன்னகத்தே கொண்ட ஆறு.
அடுத்து... என்றேன்.
கூந்தக்குளம் பறவைகள் சரணாலயம் என்றான். அந்தப் பதிலில் ஒரு துள்ளல் அவனிடம் இருந்தது. எனக்கோ அந்தக் கணம் மயிர் கூச்செரியும் ஒரு உன்னத நிலை. நான் திருநெல்வேலி வந்ததே கூந்தக்குளம் பறவைகள் சரணாலயத்தைக் காணத்தானே. அடடா திருநெல்வேலியின் அடையாளங்களுள் ஒன்றாக கூந்தக்குளம் பறவைகள் சரணாலயமும் மாறிவிட்டது. பல நூற்றாண்டு கால பறவைகளின் வருகை வரலாறு இப்போதுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
இனி அவனிடம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் கட்டபொம்மன், பாளையங்கோட்டை, பாரதியார், வ.உ.சி, குற்றாலம், மணிமுத்தாறு, பாபநாசம், நெல்லையப்பர் கோவில் என்று பதில்கள் விரியும். ஆனால் அவன் முகத்திலோ ரயில் நிலையத்தின் நடைமேடையைக் கண்டுவிட்ட உற்சாகம் தெரிந்தது. அதே உற்சாகத்துடன் நானும் ஒரு புன்முறுவலுடன் அவனை வழியனுப்பி வைத்தேன்.
கூந்தக்குளம் பறவைகள் சரணாலயத்தின் வரலாற்றைப் பார்க்கும் முன்பு ஒட்டுமொத்த திருநெல்வேலி மாவட்டத்தின் பறவைகள் வரலாற்றைப் பார்த்துவிடுவோம்.
உலகம் முழுவதும் 10500 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. அவற்றுள் இந்தியப் பறவைகள் 1300 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 520 வகையான பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் சென்ற மாதம் 30/11/2023 வரை 374 பறவை இனங்கள் ebird எனும் உலகளாவிய பறவைகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூந்தக்குளம் பறவைகள் சரணாலயத்தில் மட்டும் 224 பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புக்கு பறவை ஆர்வலர் பால்பாண்டியின் பங்கும் காரணமாக உள்ளது மகிழ்வாக உள்ளது.
பறவைகள் வரலாற்றில் தமிழ்நாட்டில் வேறெந்த மாவட்டத்திற்கும் இல்லாத பெரும் சிறப்பு திருநெல்வேலிக்கு உண்டு.
கோயமுத்தூர் மாவட்டமே பறவைகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. இதுவரை 431 பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டாவதாக திருவெல்வேலி மாவட்டத்தில்தான் 374 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோயமுத்தூர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் ஆறுகள், குளங்கள், புல்வெளி என பரந்த பிரதேசமாக இருப்பதால் 431 பறவைகள் சாத்தியமே. ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கண்ட இடங்களுக்கும் கூடுதலாக கடற்கரைப் பறவைகளையும் இங்கு காண முடியும் என்பதே திருநெல்வேலியின் சிறப்பு அம்சமாகும்.
மாவட்டத்தின் நான்கு புறங்களிலிருந்தும் மேற்குத் தொடர்ச்சி மலை, ஆறுகள், அணைகள், குளங்கள், குன்றுகள், புல்வெளிகள் என 102 இடங்கள் மையப்படுத்தப்பட்டு 468 பறவை ஆர்வலர்கள் 6400 பறவைப் பட்டியல்கள் தயார் செய்து நேரடியாக கண்டும் புகைப்படம் எடுத்தும் குரலொலிகளை பதிவு செய்தும் பல்வேறு குறிப்புகளுடன் ஆதாரப்பூர்வமாக 374 பறவைகளைக் கண்டறிந்து பதிவு செய்துள்ளனர். இது ஒரு வகையில் அரசு நிர்வாகங்களால் செய்ய முடியாத அபார சாதனை என்றே கூறலாம். இன்னும் புதுப் புது பறவை ஆர்வலர்களால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் கூடும்.
100 க்கும் மேற்பட்ட பறவைகள் காணப்பட்ட இடங்களை பறவைப் புகலிடம் என்று அழைக்கலாம். ஆனால் அவற்றில் பாதியளவு 50 க்கும் மேற்பட்ட பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கிறது எனில் அவ்விடத்தை பறவைகள் சரணாலயம் என்றும் அழைக்கலாம்.
அப்படித்தான் ஆண்டாண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான பறவைகளின் வருகையாலும், கூடுகட்டி இனவிருத்தி செய்கிற காரணத்தினாலும் தான் கூந்தக்குளம் கண்மாய் 1994 ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
எல்லோரும் நினைக்கிறார்கள் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொரித்து வளர்ந்த பிறகு பறந்து செல்கிறது என்று. ஆனால் வெளிநாட்டுப் பறவைகள் நம் நாட்டில் கூடு கட்டுவதில்லை. உணவுத் தேவைக்காக மட்டுமே நம் நாட்டிற்கு வருகை தருகின்றன. ஒரு பறவை எங்கு கூடு அமைக்கிறதோ அதுவே அந்தப் பறவையின் தாய்வீடு. நம் பறவைகள் கூடுகள் அமைக்கிற இடம் பாதுகாப்பாக இருப்பதால் வெளிநாட்டுப் பறவைகளும் அவ்விடத்தில் இளைப்பாருகின்றன. ஆயிரக்கணக்கான நம்முடைய நீர்ப் பறவைகள், கரையோரப் பறவைகளைப் பாதுகாக்கும் பொருட்டே பறவைகள் சரணாலயம் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் கூந்தக்குளம் தமிழ்நாட்டின் சிறந்த பறவைகள் சரணாலயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஏனெனில் திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறிப்பாக கூந்தக்குளம் ஊர் மக்கள் பறவைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு இந்த காட்சி ஒன்றே சாட்சி.
திருநெல்வேலியில் புத்தகத் துறையில் வேலை பார்க்கும் நண்பன் பூர்ணாவோடு கூந்தக்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு கிளம்பிச் சென்றோம். காலை 9 மணி இருக்கும். சரணாலத்திற்கு 5 கிலோமீட்டர் முன்பாக மூலக்கரைப்பட்டி என்னும் ஊர் குளத்திலேயே நின்று விட்டோம்.
கணக்கிலடங்கா பறவைகள் . சொல்லவும் வேண்டுமா! ரஷ்யா, சைபீரியாவிலிருந்து 8500 மீட்டருக்கு மேல் பறந்து, இமயமலையைக் கடந்து 8500 கிலோமீட்டர் கிடைமட்டமாகப் பறந்து திருநெல்வேலி கூந்தக்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்துள்ள வரித்தலை வாத்துகள் - Bar headed geese... நாங்கள் அருகில் சென்று செல்ஃபி எடுக்கும் வரைக்கும் எங்களை தொந்தரவாகக் கருதவில்லை. அந்தளவிற்கு இருசக்கர நான்கு சக்கர வாகனங்களின் இரைச்சல் மற்றும் வயல் வெளிகளில் வேலை செய்யும் மனிதர்களை அது ஒருபோதும் இடையூறாக நினைக்கவில்லை. நாங்கள் ஒருபக்கம் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அது ஒருபக்கம் தன்பாட்டுக்கு உணவை மேய்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அம்மக்கள் பறவைகளுக்கு இடையூறாய் இருக்கவில்லை. இந்த காரணத்திற்காகவே அந்த ஊர் மக்களுக்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கி பஞ்ச காலங்களில் அவர்களுக்கு தெரியாமலே உதவ வேண்டும்.
அதன் பிறகு நானும் பூர்ணாவும் சரணாலயத்திற்கு சென்றபோது அங்கு அவ்வளவாக பறவைகள் இல்லை. எல்லாம் தன் வயிற்றுக்கும் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டவும் இரை தேடிப் போய்விட்டன. எங்கள் தாமதத்தால் அன்று பறவைகளைப் பார்க்க இயலவில்லை. மாலை வரை காத்திருந்தால் கூடடையும் நேரத்தில் ஆயிரக்கணக்கான பறவைகளைக் காணலாம். ஆயினும் மூலக்கரைப்பட்டியிலே அதன் தாக்கத்தை உணர்ந்துவிட்டோம்.
அப்படியே அங்கிருந்து சிவந்திப்பட்டி குளம், ரெட்டியார்பட்டி குன்றுப் பகுதிகளில் பறவைகளைப் பார்த்துவிட்டு நாளை மீண்டும் கூந்தக்குளம் பறவைகள் சரணாலயம் பிறகு களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் என்று திட்டமிட்டுக் கொண்டோம்.
புள்ளினங்களை ஆகாயத்தில் எண்ணிப் பார்த்தல்
பூர்ணா அக்கணத்தை வார்த்தைகளாய் வடிக்க ஆரம்பித்துவிட்டான்.
ஒரு பறவை ஆகாயத்தில் பறக்கையில் அப்பறவையுடன் எத்தனைப் பறவைகள் அவ்விறகுக்குள் கொள்ளும்.
நெல்மணி அறுவடை முடிந்த காட்டில், ஆவினங்களின் கால் தடத்தில்
வானம்படிகளின் குஞ்சுகள்
கூட்டுக்கு நேர்கோட்டில் உச்சியிலிருந்து,
ஸ்..ஸ்...ஒலியோடு தரையிரங்கி பசியாற்றும் வானம்பாடி தாய்.
பூர்ணாவை பறவைகள் பறவைகளின் உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டன. நானோ அவனை கூட்டிப் போன பறவைகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
காகம், அண்டங்காக்கை, வால் காக்கை, நாகண வாய், பனை உழவாரன், தகைவிலான், கிணற்றுப் புறா, சிட்டுக்குருவி, கீச்சான், மயில், கவுதாரி, காடை, பனங்காடை,
தூக்கணாங்குருவி, ஊர் மரங்கொத்தி, வேதிவால் குருவி, மணிப்புறா, கள்ளிபுறா, தவிட்டுப் புறா,
குண்டு கரிச்சான், பஞ்சுருட்டான், நீல வால் பஞ்சுருட்டான், செம்போத்து,
செம்மார்பு குக்குறுவான், குயில்,
கொண்டலாத்தி, கொண்டைக்குருவி, பச்சைக்கிளி, கருந்தோள் பருந்து
கரும்பருந்து, செம்பருந்து, வல்லூறு,
புள்ளி ஆந்தை, ஊர்த் தேன் சிட்டு, ஊதாத் தேன் சிட்டு, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, மடையான், உண்ணிக் கொக்கு, சின்னக் கொக்கு, நடுவாந்தரக் கொக்கு, பெரிய கொக்கு, இராக்கொக்கு, நீல தாழைக்கோழி, நத்தை குத்தி நாரை, சாம்பல் கூழைக்கடா, சங்குவளை நாரை, சாம்பல் நாரை, செவ்வரி சாம்பல் நாரை, கரண்டிவாயன், சிறிய நீர்க்காகம், நடுத்தர நீர்க்காகம், மீசை ஆலா, ஆற்று ஆலா, வெண்மார்பு கானாங்கோழி, செம்மூக்கு ஆள்காட்டி, நாமக்கோழி, முக்குளிப்பான், வெண்புருவ வாலாட்டி, அன்றில், கறுப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், வெண்மார்பு மீன்கொத்தி, கருப்பு வெள்ளை மீன்கொத்தி, சிறிய மீன்கொத்தி, சீழ்க்கை சிறவி, பாம்புத்தாரா, பவளக்கால் உள்ளான், பட்டாணி உப்புக்கொத்தி, தாமரைக் கோழி, கறுப்பு தாமரைக்கோழி, ஆற்று மண்கொத்தி, பெரிய மண்கொத்தி, மாம்பழச்சிட்டு, மாங்குயில், பழுப்புக் கீச்சான், கதிர்குருவி, அக்காகுயில், சுடலைக் குயில், சாம்பல் கதிர்குருவி, தையல் சிட்டு, தவிட்டுக்குருவி, கருஞ்சிட்டு, மலர்கொத்தி, தினைக்குருவி, புள்ளி தினைக்குருவி, சாம்பல் வாலாட்டி, வயல் நெட்டைக்குருவி, வரித்தலை வாத்து, செம்மூக்கு வாத்து, செண்டு வாத்து, ஊடசிவால் வாத்து.
இவ்வளவு பறவைகளிடமிருந்து பூர்ணாவை மீட்டு வந்தாலும் அவன் நினைவில் பனை மரத்தில் கூடு கட்டியிருந்த கூழைக்கடா பறவை தங்கிப் போனது.
திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்[3] கூழைக்கடா தமிழகத்தின் சிறப்பை உணர்த்தும், நீர்ப்பறவை.
“வருகினும் ஐயே! பறவைகள் வருகினும் ஐயே!
வருகினும் ஐயே! திரிகூட நாயகர்
வாட்டமில்லாப் பண்ணைப் பாட்டப் புறவெல்லாம் குருகும் நாரையும் அன்னமுந் தாராவும் கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும்.
இலையுதிர்கால மரத்தின்
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழி தீர்வார் உறவல்லர்-அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு-முதுரை :17
பறவைகள் பிரிவை இப்படியாக எழுதுகிறான் பூர்ணா.
குளக்கரையில் இருக்கும் மரங்களின் இலைகள்,
குள வெடிப்புகளில் நிரம்பும் காலம், இறகுகளை உதிர்த்து ஆயத்தமாகின்றன
புலம் பெயர்ந்து
குளத்தை நாடி வந்த நீர்ப் பறவைகள்.
திருநெல்வேலி மண்ணை நேசிக்க எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றுள் இயற்கையை நேசித்து விட்டால் நாம் எதையும் நேசித்துவிடலாம்.
இயற்கையை வெறும் செய்திகளாக மட்டுமே படித்தும், பார்த்தும், பழகியும் வந்தவர்களுக்கு அச்செய்திகளைக் கொண்டே கூரிய சிந்தனைகளை விதைப்பது எவ்வளவு கடினம் என்பது இயற்கையை வாழ்க்கைக்கல்வி பாடத்தோடு இணைத்தபோதும், வாழ்க்கையிலிருந்தே இயற்கையை அகற்றிவிட்டவர்களுக்கு மத்தியிலும், இயற்கையை பண்பாடு, பாரம்பரியம், வாழ்வுப் பிரச்சனையோடு தொடர்பு படுத்தி உணர்ச்சிமய கொந்தளிப்போடு உலவுபவர்களுக்கு மத்தியிலும் இயற்கையைப் புரிந்து கொள்வது எவ்வளவு கடினம் என்பது ச.முகமது அலியோடும் அவரது எழுத்துக்களோடும் இணைந்து பயணிக்கையில்தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனாலும் அத்தனை எளிது அவர் சிந்தனைகளைப் பற்றிக் கொள்வது. என்ன செய்வது பற்றிக் கொள்ளத்தான் யாரும் தீக்குச்சியாக இருப்பதில்லை இங்கு. ச.முகமதுஅலியின் எழுத்துக்களை வாசிப்பவர் எவரும் பற்றிக் கொள்வார்கள் என்பது கண்கூடு. இதோ இந்நூலில் காட்டுத் தீ பற்றிய ஒரு செய்தி. வட அமெரிக்காவின் காடுகளில் இடி மின்னல் ஆகியவற்றால் மட்டும் ஆண்டுக்கு 7000 தீ விபத்துகள் ஏற்படுகின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை காடுகளில் இடி, மின்னல்களால் இயற்கையாகத் தீப்பிடிப்பதில்லை. அனைத்து...
Comments
Post a Comment