Skip to main content

காட்டுத் தீ எனும் மாயையும் இயற்கைப் புரிதலும்

காட்டுத் தீ ஒரு சதவீதம் கூட இந்தியாவில் இயற்கையாகப் பற்றாது. மூடநம்பிக்கை கொண்ட மனிதர்களாலும், சுற்றுலா என்கிற பெயரில் சென்று மது, புகை பிடித்து தூக்கிபோட்டுக் கும்மாளமிடும் மனிதர்களாலும், மரங்களைக் கடத்தும் கும்பலாலும், திருட்டு வேட்டைக்கார்களாலும், மலைவாழ் மக்களாலும்தான் காட்டில் 100 சதவீதம் தீப்பிடிக்கிறது. (மலைவாழ் மக்கள் என்பவர்கள் இங்கு சில நூறு எண்ணிக்கையில் இருக்கும் பழங்குடிகள் அல்ல) இடி இடித்து, மின்னல் வெட்டி, மூங்கிலோடு மூங்கில் உரசி காடு தீப்பிடிக்கிறது என்பதும், காடு எரிந்த பின்னர் புதிதாய் முளைக்கும் புற்கள் ஆடுமாடுகளுக்கு ஊட்டசத்து மிக்கது என்பதும், காடு எரிந்து மொட்டையாய் இருந்தால் வனவிலங்குகள் ஊருக்குள் வராது என்பதும் கடைந்தெடுத்த மூடத்தனம். ஆயினும் மலைவாழ் மக்களின் மீது வனத்துறையினர் விதிக்கும் கட்டுப்பாடுகளின் மீதுள்ள கோபமும் ஒரு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. இதை உணர்ந்த மத்திய அரசு, தீத்தடுப்புக்காக பல்வேறு கோடிகளை பட்ஜெட்டில் ஒதுக்கி, ஒரு ஆணையமும் அமைத்தது. ஆனால் வேலைகள்தான் நடந்த பாடில்லை. தமிழகம் முழுவதுமுள்ள பல குன்றுப் பகுதிகள் மட்டுமின்றி கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளும் தொடர்ந்து தீ பிடித்த வண்ணம்தான் இருக்கின்றன. இது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் படர்ந்து பற்றி எரிகின்றன. புழு, பூச்சி, ஊர்வன, பறப்பன, அரிய தாவர, ஊண் உண்ணிகள் என லட்சக்கணக்கான உயிரினங்கள் மடிகின்றன. ஏற்கனவே அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்ட உயிரினங்களின் பாதுகாப்பு மேலும் கேள்விகுறியாகிவிட்டது. இந்த நிலையில் காட்டுத் தீ ஏற்படக் காரணமானவர்கள் மீது ஒரு நடவடிக்கையும், விசாரணையும் இதுவரை நடக்கவில்லை. ஒதுக்கப்பட்ட கோடிகள் என்னாயின? இல்லை கோடிகள் கானல் நீர் போன்று ஒதுக்கப்பட்டனவா? இன்று தேனி மாவட்டம் குரங்கனியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் மனிதர்கள் இறந்தபோதுதான் சூழல் பற்றிய அனைத்து அக்கறைகளும் ஒரு சேர சூழ்ந்து கொண்டது. ‘எவரெஸ்ட்' என்றொரு ஆங்கிலத் திரைப்படம். ட்ரெக்கிங் சம்பந்தமானது. உலகின் ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் பலர், பல லட்சங்களை செலுத்தி, உலகின் உச்சிக்குப் போக வேண்டும் என்ற தீராத ஆசையுடன் சாகசப் பயணத்திற்கு கிளம்புவார்கள். தனியார் ட்ரெக்கிங் நிறுவனம்தான் அவர்களை அழைத்துச் செல்லும். உயிருக்கு உத்திரவாதம் அற்ற பயணம் என்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள். எல்லோரும் அவரவர் குடும்பங்களை விட்டுப் பிரிந்த நிகழ்வுகளுடனே பயணத்தை மேற்கொள்வார்கள். உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் ஏறக்குறைய 28000 அடிகளைக் கொண்டது. எவரெஸ்டில் ஏறுவதற்கு ஏற்ற காலமான மே 9, 10 இருநாட்களாக பயணம் மேற்கொள்வார்கள். ஒவ்வொரு அடியாய் நகர்வார்கள். அவர்களால் 18000 அடி வரைதான் சுவாசிக்க முடியும். அதன்பிறகு உயிர்மூச்சான ஆக்சிஜன் இல்லாது போய்விடும். பின்பு ஆக்சிசன் சிலிண்டர்கள் இல்லாது பயணத்தை தொடர முடியாது. ஒவ்வொரு அடியும் மிகக் கவனமாக வைத்துத்தான் செல்ல வேண்டும். ஒருவரின் சிறு கவனச் சிதறலும் அந்தக் குழுவுக்கே பல சிக்கல்களை உண்டு பண்ணிவிடும். மிக நெருக்கமாக பனி உருகிச் சரியும். திடீரென்று பனிப்புயல் உருவாகும். கடுங்குளிரில் ஒவ்வொருவருடைய உடலும் விரைக்க ஆரம்பிக்கும். ஒவ்வொருவராய் பின்தங்குவார்கள். சிலர் வழி தவறுவார்கள். அவர்கள் கொண்டு சென்ற ஆக்சிஜன் தீரும் நிலைக்கு வந்துவிடும். சிலர் மரணிப்பார்கள். சிலர் உச்சத்தை அடைவார்கள். உச்சத்தை அடைந்த பின்பும் அவர்களால் தரையிறங்க முடியாது. ஒருவருக்கொருவர் குறைந்த அளவு ஆக்சிஜனை பரிமாறிக் கொண்டு உயிரை தற்காத்துக் கொள்ள முயல்வார்கள். இறுதியில் அவர்களும் விரைத்து மரணித்துப் போவார்கள். யாரும் திரும்பவில்லை என்று உறுதியான பிறகு, இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவலைச் சொல்வார்கள். உடலை மீட்கும் பணிகள் தொடரும். யாரும் எதிர்பாரா வகையில் ஒருவர் முனங்கும் சத்தம் கேட்டு, அழுத்தத்தின் காரணமாக அவ்வளவு உச்சிக்கு வர முடியாத போதும் ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்று அந்த ஒருவரை தூக்கிக் கொண்டு வருவார்கள். ஆனால் அவர் உயிர் பிழைத்து, முகம் சிதைந்து, கைகள் சிதைந்துபோன போதும் ஒரு அரைமணி நேரம் நான் நடந்திருந்தால் நானும் உச்சியை அடைந்திருப்பேன் என்று தன்னால் எவரெஸ்ட் சென்று அதை அடைய முடியாத வருத்தத்ததைச் சொல்வதாக படம் முடியும். எவரெஸ்ட்டில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கைடுகள் சிறந்தவர்களாக காட்டப்பட்டிருப்பார்கள். ஆனால் ட்ரெக்கிங் மேற்கொள்ளும் பயணிகள்தான் ஆர்வத்தின் பேரிலும், வனம் சார்ந்த அறிவு அற்றவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். ஒரு காட்சியில் பணம் இருக்கும் அதிகாரத்தில் கைடுகளைப் பார்த்து எங்களை உயிரோடு கீழே கொண்டு போகாவிட்டால்... என்று மிரட்டுவதும், ட்ரெக்கிங் நடத்தும் தனியார் நிறுவனம் பணம் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு செயல்படுவதும் என அவ்வப்போது சில காட்சிகளில் காட்டுவார்கள். படம் முழுவதும் ஜிவ்வென்றுதான் நாமும் பார்க்க வேண்டியிருக்கும். ட்ரெக்கிங் குறித்த நுணுக்கம் கொண்ட கைடு இறப்பதும், உலகின் எல்லாப் பனிச் சிகரங்களிலும் ஏறி சாதனை செய்து, நிறைவாக எவரெஸ்டையும் அடையத் துடிக்கும் மனமும், வனம் குறித்து பாதுகாப்பு அறிவுள்ள நடுத்தர வயதுடைய பெண் ஒருவர், உலகின் உச்சியை அடைந்த பெருமிதமும், கீழே இறங்கும் போது அவர் மரணமடையும் நிகழ்வும் நம்மை பரிதவிக்கச் செய்பவை. ட்ரெக்கிங் என்பது நாம் நினைப்பது போல ECO சுற்றுலா அல்ல, கண்கவரும் சோலைகள், அருவிகள், புல்வெளிகள், மிதமான குளிர், மிதமான காற்று, பறவைகளின் இனிய குரல்கள், மலர்கள் என்று மகிழ்ந்து வீடு திரும்புவதற்கு. அதுவொரு சாகசப் பயணம். எல்லாவித பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும், நுண்ணறிவு கொண்ட கைடுகள் இருந்தாலும், கவனச் சிதறல்களும், இயற்கை அளிக்கும் பரவசமும் அதே சமயத்தில் இயற்கை அளிக்கும் சவால்களும் நம்மை திக்கு முக்காடச் செய்பவை. வனவிலங்குகள் தாக்குதல், திடீர் காட்டாற்று வெள்ளம் என்று சிலசமயம் நமது உயிரையும் பறித்துவிடக் கூடியவை. ஆம் இயற்கை தரும் புயலும், வெள்ளமும். கடுங்குளிரும், வடஅமெரிக்க நாடுகளில் ஆண்டு 7500 முறை ஏற்படும் காட்டுத் தீயும், எரிமலையும், நிலநடுக்கமும், சுனாமியும் கூட இயற்கை கூறுகளின் பரவசம்தான். அந்தப் பரவசத்தில் இன்பம் கொண்டும், துன்பம் கொண்டும்தான் இந்த மனித இனம் இன்று வலிமை கொண்டு எஞ்சியுள்ளதை நம்மால் மறுக்க இயலாது. தேனி குரங்கனியில் நடந்தது அனைத்தும் மனிதத் தவறுகள். நம்முடைய காட்டில் மனிதர்கள்தான் தீ வைத்தார்கள். அதை அணைக்க தவறியது மட்டுமில்லாமல் அதை அறிந்தும் கவனச் சிதறலோடு அழைத்துச் சென்ற ட்ரெக்கிங் மனிதர்கள், ட்ரெக்கிங் பயணத்தை சிறுவயது குழந்தைகளோடு அழைத்துச் சென்ற மனிதப் பெற்றோர்கள், என அனைத்தும் செயற்கையான மனிதத் தவறுகளே... மனிதத் தவறுகளே... ஒரேயொரு ஆறுதல் அருகிலிருந்தவர்கள் செய்த மீட்புப் பணியே. காடுகள் மீதான ஆர்வத்தின் பேரிலேயே அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். வனம் சார்ந்த விழிப்புணர்வு ஒருசிலர் தவிர்த்து மற்றவர்களிடம் இல்லாதிருந்தாலும், அவர்கள் இயற்கையை நேசித்திருக்கிறார்கள். அந்தக் காடு அவர்களை தண்டிக்கவில்லை, காட்டுக்குத் தீ வைத்த மனிதன்தான் தண்டித்திருக்கிறான். அவர்கள் மரணம் நம்மை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அவர்களின் மரணத்தின் மூலம் இனியாவது நாம் காட்டு தீ ஏற்படா வண்ணம் கவனமாய் இருப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதையாகவும் அஞ்சலியாகவும் இருக்கும் என்று எழுதிவிட்டுப் போய்விட முடியவில்லை. இவ்விடத்தில் யாரை கைது செய்து விசாரணை நடத்தினாலும் அது விபத்துதான். இங்கு யாரும் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. இனி இது போன்ற விபத்துகளை ஓரிரு நாளிலோ, ஓரிரு மாதங்களிலோ தடுத்துவிட முடியாது. தொடர்ந்த கல்வியாலும், விழிப்புணர்வாலும் மட்டுமே சாத்தியம். இது காவல்துறையைப் போன்று சட்ட ஒழுங்குப் பிரச்சனையல்ல என்பதும் மாறாக இது வன மேலாண்மை, காட்டுயிர் பாதுகாப்பு, பழங்குடிகள் ஒத்துழைப்போடு செயல்படக் கூடியது என்பதையும் நன்கறிவார்கள். நாளையே கொடைக்கானல் பூங்கா கண்காட்சி, மூனார் வரையாடு, தேக்கடி படகு சுற்றுலா, ஊட்டி தாவரவியல் பூங்கா, மேட்டுப்பாளையம் யானைகள் முகாம் என்று பரபரப்பாகிவிடுவார்கள். உடனடியாக சில முயற்சிகளை எடுக்காவிட்டால் சுற்றுச்சூழல் மேலும் மோசமாகி ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகி மேலும் சிரமத்தில் ஆழ்த்தும். 1.சூழல் ஆய்வில், காட்டுயிர் பாதுகாப்பில் ஈடுபடும் தன்னார்வக்குழுக்களை பாரபட்சமின்றி அதிகப்படுத்த வேண்டும். அடர்ந்த மலைகள் அடங்கிய ஊட்டி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு போதிய அளவு வனம் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 2. தாலுகாக்கள்தோறும் சிறு சிறு உயிரியல் பூங்காக்களை ஏற்படுத்த வேண்டும். அதனுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களோடு சேர்த்து, உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைக் கொண்ட தரமான மியூசியம் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் உலகத்தரத்திலான உயிரியல் பூங்காக்களையும் மியூசியங்களையும் மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும். 4.மலையேற்ற பயிற்சிகளுக்கு அடர்ந்து காடுகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. சிறுசிறு குன்றுகளுக்குச் சென்று முதலில் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். உள்ளூர் பறவை பார்த்தல், வண்ணத்துப்பூச்சிகள் பார்த்தல், மரங்களைக் கவனித்தல், குளம் மற்றும் நீர்நிலைகளைப் பார்வையிட்டு உள்ளூர் மக்களின் வனவுயிர்கள் பற்றிய மூடநம்பிக்கைகளைக் களையலாம். 5. பள்ளிகளில் இருக்கும் பசுமைபடையை துரிதப்படுத்தி அந்தந்த வகுப்புகளில் கட்டாயம் சுற்றுச்சூழல் குறித்த புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். 6.மிகமுக்கியம் வனம், மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின், ஆர்வலர்களின் கருத்தை பரிசீலித்து முறையாக செயல்படுத்த வேண்டும். மேற்கண்டவற்றை செயல்படுத்தினால் காடுகள் பாதுகாக்கப்படும், சுற்றுச்சூழல் மேம்படும் என்பதெற்கெல்லாம் உத்திரவாதம் இல்லை. இருப்பினும் இவையெல்லாம் அடிப்படைகள். இயற்கையைப் புரிந்துகொண்டு, காடுகளை நாம் பொறுப்புணர்ச்சியோடு அணுகுவதற்கு நாம் படிக்கும் முதல் பாடங்கள்.

Comments

Popular posts from this blog

திருநெல்வேலிப் புள்ளினங்கள்

திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்கான அனைத்து உடைமைகளையும் எடுத்து தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். அவன் ரயில் ஜன்னலை குனிந்து பார்த்தவாறே நடை மேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து எனக்கு எதிர் திசையில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன். அமர்ந்தான். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. எத்தனையாவது படிக்கிற என்றேன். 11 வது என்றான். திருநெல்வேலின்னா உடனே உனக்கு என்னென்னலாம் ஞாபகம் வரும்னு கேட்டேன். அல்வா என்றான். இந்த பதில் மனிதனுக்கு முதல் தேவை உணவு என்பதைப் போல் இருந்தது. எவ்வுயிரினத்திற்கும் அடிப்படை உணவு. ஆனால் மனிதனுக்கோ அது சுவையோடு பிண்ணிப் பிணைந்தது. உணவுக் கலை ஒன்றே மனிதனோடு காலந்தோறும் கூடவே வருவது. ஓர் உணவு ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் என்கிற வகையில் அவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது எனில் அது உலகளவில் கவனம் பெறக்கூடிய நிலையை அடைகிறது. மற்றும் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு சேர்க்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பது ...

இயற்கை செய்திகள் சிந்தனைகள்:

இயற்கையை வெறும் செய்திகளாக மட்டுமே படித்தும், பார்த்தும், பழகியும் வந்தவர்களுக்கு அச்செய்திகளைக் கொண்டே கூரிய சிந்தனைகளை விதைப்பது எவ்வளவு கடினம் என்பது இயற்கையை வாழ்க்கைக்கல்வி பாடத்தோடு இணைத்தபோதும், வாழ்க்கையிலிருந்தே இயற்கையை அகற்றிவிட்டவர்களுக்கு மத்தியிலும், இயற்கையை பண்பாடு, பாரம்பரியம், வாழ்வுப் பிரச்சனையோடு தொடர்பு படுத்தி உணர்ச்சிமய கொந்தளிப்போடு உலவுபவர்களுக்கு மத்தியிலும் இயற்கையைப் புரிந்து கொள்வது எவ்வளவு கடினம் என்பது ச.முகமது அலியோடும் அவரது எழுத்துக்களோடும் இணைந்து பயணிக்கையில்தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனாலும் அத்தனை எளிது அவர் சிந்தனைகளைப் பற்றிக் கொள்வது. என்ன செய்வது பற்றிக் கொள்ளத்தான் யாரும் தீக்குச்சியாக இருப்பதில்லை இங்கு. ச.முகமதுஅலியின் எழுத்துக்களை வாசிப்பவர் எவரும் பற்றிக் கொள்வார்கள் என்பது கண்கூடு. இதோ இந்நூலில் காட்டுத் தீ பற்றிய ஒரு செய்தி. வட அமெரிக்காவின் காடுகளில் இடி மின்னல் ஆகியவற்றால் மட்டும் ஆண்டுக்கு 7000 தீ விபத்துகள் ஏற்படுகின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை காடுகளில் இடி, மின்னல்களால் இயற்கையாகத் தீப்பிடிப்பதில்லை. அனைத்து...

அறிமுகம்

குழந்தைகள் வரையும் ஓவியத்தை உற்று நோக்கினால், பறவைகள் சில பறந்து கொண்டிருக்கும், மலைகள் முக்கோணமாக உயர்ந்திருக்கும், நதிகள் நீல வண்ணத்தில் தீட்டப்பட்டிருக்கும். இவற்றிலெல்லாம் ஏதோவொரு ஒழுங்கு மறைந்திருக்கும். ஆனால் பச்சை நிறத்தில் மரங்களும் செடிகளும் கொடிகளுமென காடுகள் ஒழுங்கற்று கிறுக்கப்பட்டிருக்கும். இந்த பூமி குழந்தைகள் வரைகிற ஓவியமாக பத்திரப்படுத்தப்பட வேண்டுமென்பது வாழை குமார் போன்ற சூழலியலாளர்களின் அக்கறை. - கவிஞர். சக்திஜோதி