ச.முகமதுஅலியின் நெருப்புக்குழியில் குருவி படித்த பின்னும், இது போன்ற அரிய வெளியீடுகளை, சிறுபத்திரிக்கையின் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்காமல் போனால், எதிர்வருகிற மனிதகுல அழிவுக்கு நாமும் ஒரு காரணமாகிவிடுவோம் என்கிற அச்சத்துடனேயே இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இந்தப் பூமியில் உயிர் வாழ்கின்ற எந்தவொரு உயிரினமும் உணவுச்சங்கிலியைக் கொண்டே சுழல்கிறது எனும் போது, காட்டுயிர்கள் அழியும்பட்சத்தில் மனிதகுலம் மட்டும் தலைத்துவிடுமா என்ன? இந்தச் சிறு புரிதல்கூட நமக்கு இல்லாது போனது ஏன்? என்பதை விரிவாக அலசுகிறது இந்நூல்.
சமீபத்திய செய்தி ஒன்று இப்படி! இந்தியாவின் குஜராத்தில் மட்டுமே உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 500 லிருந்து 550 சிங்கங்களாக உயர்ந்திருக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் சிங்கங்கள் இருந்தன என்று படிக்கும்போது, காட்டுயிர் பாதுகாப்பில் நாம் எவ்வளவு பெரிய படுபாதகமான செயலைச் செய்துவிட்டு, எவ்விதச் சத்தமும் இல்லாமல் நகர்ந்து வந்திருக்கிறோம். நம்பாட்டுக்கு கதையளந்து, குடி மயக்கத்தில் உழன்று கொண்டிருக்கிறோம். இது தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் உலை என்று இனியும் நாம் உணர வேண்டாமா?
இதைத் தெரிந்தே செய்கிற சுயநலக் கூட்டத்தை எதிர்க்கத் திராணியில்லாமல், எதிர்த்து வாழ வழி தெரியாமல் சாகும் காட்டுயிர்களைப் போலவே, நாமும் சாவதற்கு முன் இதோ, இந்த யானைகளைப் போன்றாவது நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டாமா? தன் வாழிடத்தை அழிக்கத் துடிக்கும் மனிதக் கும்பல்களுக்கு எச்சரிக்கை விடும் வண்ணம், தன் செயல்களுக்கு (ஊருக்குள் நுழைதல், தோட்டப் பயிரினை உண்ணுதல்) நியாயம் கற்பிக்கும் யானைகளைப் பார்த்தாவது நாம் பாடம் கற்க வேண்டாமா?
இதற்கு ஒருமித்த கருத்து தேவைப்படுகிறது என்று யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப் போவதில்லை. பிறகு எதற்கு தயக்கம்? இருப்பினும் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் ஒவ்வொரு தனிமனிதருக்கும் பல்லுயிர் குறித்த அறிவியல் பூர்வமான விளக்கங்களை அறியச் செய்யுமாறு சில முன்முயற்சிகளை நாம்தான் எடுக்க வேண்டும். அதைத்தான் ச.முகமதுஅலி க.யோகானந்த் ஆகியோர் செய்து வருகிறார்கள். காட்டில் வாழும் உயிர்களைப் பற்றிய மனிதர்களின் அறியாமையை திடமாக அகற்றி, சுற்றுச்சூழலை காக்கப் போராடுவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. பல்லுயிர்கள் பற்றிய ஒரு புரிந்துணர்வுக்காகவே மட்டுமே நெருப்புக் குழியில் குருவி நூல் பல லட்சம் பிரதிகள் அடித்துப் பரப்பபட வேண்டும். அத்தொகுப்புதான் யாரென்றும் பாராமல் விமர்சனம் செய்கிற பேராற்றலுடன் வெளிவந்தது. பிறகு நாம் காணப் போகின்ற தனித்தனியான வனவிலங்குகளைப் பற்றிய புரிதலை எல்லோரும் பெற வேண்டும்.
ஏறக்குறைய ஒரு மனித இனத்தின் வாழ்நிலை மற்றும் குடும்ப உறவுகளைப் பேணக்கூடிய, அதன் ஆயுள் வரைக்கும் அனைத்தும் ஒத்துப்போகின்ற இனம் யானைகளுடையது. சங்க இலக்கியம் தொட்டு இன்று மலினப்பட்டுபோன சினிமா வரைக்கும் யானைகள் என்கிற பிம்பம் மனிதனுக்கு கருவியாய் செயல்பட்டிருக்கிறது. பாவம் யானைகள். மனிதன் தோன்றிய காலம் தொட்டிருந்தே அவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் சாபம் துயரமானதுதான். ஆனால் அறிவியல் வளர்ச்சி விண்ணளவு சாதனை செய்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலுமா யானைகள் துயரம் தொட வேண்டும். யானைகள் இனம் அழிந்து கொண்டிருக்கிற அதன் இறுதிக்கட்டத்தில் அதைக் காப்பாற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் அழியும் பேருயிர் யானைகள் என்கிற நூல் தக்க நேரத்தில் வெளிவந்திருப்பது இச்சமயத்தில் முக்கியமானது.
நான் சிறுவயதில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்றிருந்த போது 10 க்கு 10 அடி சுற்றளவு கொண்ட ஓர் அறையில், பத்து வயது மதிக்கத்தக்க யானையின் கால்களை சங்கிலியால் கட்டிப் போட்டிருந்தார்கள். அந்த யானை தன் நான்கு கால்களையும், தலையையும் அசைத்தவாறே திணறிக் கொண்டிருந்தது. அப்போது அந்த யானை சங்கிலியை அவிழ்க்க முடியாமல்தான் சிரமப்படுகிறது என்று நினைத்தேன். ஆனால் யானை ஒரு நாளுக்கு சராசரியாக 100 கிலோமீட்டர் வரை நடக்கக் கூடியவை என்று இந்நூலில் வாசித்தபோது, மீண்டும் அந்தக்காட்சி சட்டென்று மனதுக்குள் வந்தது. உண்மையில் மனம் சஞ்சலப்பட்டு துக்கமடைந்தேன். அந்த யானை நின்ற இடத்தில் நின்று கொண்டே 100 கிலோமீட்டர் நடந்திருக்கிறதே... எவ்வளவு பெரிய வன்கொடுமையை அந்த யானைக்குச் செய்திருக்கிறோம். மனித நடமாட்டம் மிக்க இடங்களில், பலமணிநேரமாய் மூத்திரத்தை அடக்கிக் கொண்டு கழிவறையைத் தேடும் மனநிலையல்லவா அது. இது மனிதருக்கென்றால் உளவியல் சிக்கல். யானைக்கு என்றால் இடியாப்பச் சிக்கலா?
அக்காட்சி மேலும் மேலும் என்னைக் குடைய ஆரம்பித்தது. பிடித்து வளர்க்கப்படும் யானைகளில் பல யானைகள் கால்கள் வீங்கியே சாகிறது என தினசரி நாளிதழில் செய்தி வெளியிட்ட போதெல்லாம் தெரியாத காரணம் இப்போது புரிந்தது. எனக்கென்னவோ நாம் இரக்கமற்ற மனிதர் வாழும் பூமியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற யதார்த்தம் உறுத்திக் கொண்டேயிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் ஒரு புகைப்பட விளக்கம். சூறைக் காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து விவசாயத்திற்கு சேதத்தை விளைவித்தது. இச்செய்தி ஒரு இயற்கையின் செயல். (ஆக்ட் ஆப் காட்) ஆனால் யானைகள் அதைச் செய்தால் மட்டும் பழி யானையின் மீதா? அதுவும் இயற்கையின் செயல்தான் என்று ஏன் அப்பாவியாக மறந்துவிட்டோம். இதில் நம் தவறை மறந்துவிட்டு மின்வேலிக் கம்பிகள் அமைப்பதெல்லாம் எந்தவிதத்தில் நியாயம்? இதுபோன்ற பல கேள்விகள் இந்நூலில் பக்கத்திற்கு பக்கம் விரிந்து கிடக்கிறது. மற்றபடி யானைகள் பெருக்கத்திற்கான வழிமுறைகளையும், ஆய்வுப்பூர்வமான விளக்கங்களும், யானைகளை காப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகளும் என ஓர் இனத்தைப் பற்றி முழுமையாக அறிந்து அறிவியல் ரீதியாக செயல்பட நம்மை மிகவும் ஊக்குவிக்கும் நூல் அழியும் பேருயிர் யானைகள்.
இதை எழுதி முடிக்கும் போது கூட நெருப்புக்குழியில் குருவி நூலே முன்வந்து நிற்கிறது. யானையைப் பற்றி உலகிலேயே மட்டகரமான உவமையைத் தந்த ஜெயமோகன்தான் இன்று யானை டாக்டர் டாக்டர் என்கிற ஓரளவு தேறுகிற படைப்பைத் தந்திருக்கிறார். அந்நூலிலும் ஏகப்பட்ட ஓட்டடை உடைசல்கள் உள்ளன என்று க.யோகானந்த் விளக்குகிறார். இதுபோல் குட்டுவைக்கப்பட்ட பலரும் இன்று தங்களது கருத்தை மாற்றிக் கொண்டிருப்பது போல இந்தப் புத்தகமும் அது போன்ற மாற்றங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையை இந்தப் புத்தகம் எனக்கு ஏற்படுத்துகிறது. அதற்கு முழுமுதற் காரணமாக ச.முகமதுஅலியும், க.யோகானந்த்தும் அவரது குழுவினரும் இருக்கப் போகிறார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்கான அனைத்து உடைமைகளையும் எடுத்து தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். அவன் ரயில் ஜன்னலை குனிந்து பார்த்தவாறே நடை மேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து எனக்கு எதிர் திசையில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன். அமர்ந்தான். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. எத்தனையாவது படிக்கிற என்றேன். 11 வது என்றான். திருநெல்வேலின்னா உடனே உனக்கு என்னென்னலாம் ஞாபகம் வரும்னு கேட்டேன். அல்வா என்றான். இந்த பதில் மனிதனுக்கு முதல் தேவை உணவு என்பதைப் போல் இருந்தது. எவ்வுயிரினத்திற்கும் அடிப்படை உணவு. ஆனால் மனிதனுக்கோ அது சுவையோடு பிண்ணிப் பிணைந்தது. உணவுக் கலை ஒன்றே மனிதனோடு காலந்தோறும் கூடவே வருவது. ஓர் உணவு ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் என்கிற வகையில் அவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது எனில் அது உலகளவில் கவனம் பெறக்கூடிய நிலையை அடைகிறது. மற்றும் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு சேர்க்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பது ...
Comments
Post a Comment