Skip to main content

இயற்கை செய்திகள் சிந்தனைகள்:

இயற்கையை வெறும் செய்திகளாக மட்டுமே படித்தும், பார்த்தும், பழகியும் வந்தவர்களுக்கு அச்செய்திகளைக் கொண்டே கூரிய சிந்தனைகளை விதைப்பது எவ்வளவு கடினம் என்பது இயற்கையை வாழ்க்கைக்கல்வி பாடத்தோடு இணைத்தபோதும், வாழ்க்கையிலிருந்தே இயற்கையை அகற்றிவிட்டவர்களுக்கு மத்தியிலும், இயற்கையை பண்பாடு, பாரம்பரியம், வாழ்வுப் பிரச்சனையோடு தொடர்பு படுத்தி உணர்ச்சிமய கொந்தளிப்போடு உலவுபவர்களுக்கு மத்தியிலும் இயற்கையைப் புரிந்து கொள்வது எவ்வளவு கடினம் என்பது ச.முகமது அலியோடும் அவரது எழுத்துக்களோடும் இணைந்து பயணிக்கையில்தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனாலும் அத்தனை எளிது அவர் சிந்தனைகளைப் பற்றிக் கொள்வது. என்ன செய்வது பற்றிக் கொள்ளத்தான் யாரும் தீக்குச்சியாக இருப்பதில்லை இங்கு. ச.முகமதுஅலியின் எழுத்துக்களை வாசிப்பவர் எவரும் பற்றிக் கொள்வார்கள் என்பது கண்கூடு. இதோ இந்நூலில் காட்டுத் தீ பற்றிய ஒரு செய்தி. வட அமெரிக்காவின் காடுகளில் இடி மின்னல் ஆகியவற்றால் மட்டும் ஆண்டுக்கு 7000 தீ விபத்துகள் ஏற்படுகின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை காடுகளில் இடி, மின்னல்களால் இயற்கையாகத் தீப்பிடிப்பதில்லை. அனைத்தும் மனிதர்களால் தீ மூட்டப்படுபவையே. சிந்தித்துப் பாருங்கள். இன்று இந்தியா முழுவதுமுள்ள காடுகளில் எல்லாக் காலங்களிலும் எங்காவது ஒன்றிரண்டு குன்றுகளில் தீப்பற்றி எரிந்து கொண்டு தானே இருக்கிறது. இந்த அரசும் ஊடகமும் ஒரு போதும் மனிதர்களின் மீது குற்றம் சுமத்தியது உண்டா? மாறாக இயற்கையின் மீதே பழி சுமத்திவிட்டு மிக எளிதாக கடந்துவிடுவது தானே இச்சமூகம்? இது போன்று எண்ணற்ற பழிகளை இயற்கை மீது செலுத்திவிட்டு தப்பிவிடலாம். ஆனால் விஞ்ஞானம் மீது செலுத்தும்போது நாம் இருப்பது தெரியாமலே முன்னேறிச் சென்றுவிடும். இப்பிரபஞ்சத்தில் மனித இனம் தோன்றியதிலிருந்தே இயற்கையுடன் மல்லுக்கட்டித்தான் மனிதன் வாழ்ந்து வந்திருக்கிறான். இப்போதும் இருக்கிறான். எப்போதும் இருப்பான். இப்போது சாதாரண வெகுமக்கள் மழைக்காக ஏங்குவதும் மழையைப் பழிப்பதும் போலவே, படித்த மேதாவிகள் ஆக்கத்திற்கான அறிவியல் அழிவிற்கான அறிவியல் என்று பிற்போக்குச் சிந்தனைகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கிறார்கள். நாம் பொதுவாகவே மேலைத்துவ மருத்துவ இயலை உயர்த்திப் பிடிக்கும் போது, சித்தா, ஆயுர்வேதம் போன்ற உலகிலுள்ள இன்னபிற நாட்டு மருந்துகளுக்கெல்லாம் எதிரானவர்கள் என்றும், முதலாளியச் சார்பு கொண்டவர்கள் என்றும் உடனே முத்திரை குத்திவிடுகிறார்கள். இவர்கள் போன்றவர்களுடன் விவாதம் செய்து நேரத்தை வீணடித்து உடலுக்கு மனதுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வானேன்? வேண்டுமானால் அவர்களுக்கு இந்நூலிலுள்ள ஒன்றிரண்டு குறிப்புகளை பதிலாகச் சுட்டிக் காட்டலாம். மூலிகை என்ற பெயரில் இலைகளை அப்படியே பயன்படுத்துவது தவறு. செடிகளில் ஏதேனும் ஒரு பாகத்திலுள்ள வேதியியல் கூறுகளை அறிந்து, அதை அறிவியல் முறையில் பிரித்தெடுத்து, குறிப்பிட்ட நோய்க் கிருமிக்கு எதிரான முறையில் சோதித்துப் பயன்படுத்திப் பார்க்கும் மனப்பான்மையே மருந்து அறிவியலாகும். வேம்பு மிகுந்த மருத்துவத் தன்மை கொண்டதாக பெருமளவு நம்பப்படுவது மதம் சார்ந்த மூடநம்பிக்கையே ஆகும். வேப்பமர விதையில் பெருமளவு இருக்கும் அசாடிராக்டின் என்ற வேதிப் பொருள் சிறிது பூச்சிக் கொல்லிப் பண்புடையது. ஆனால் சர்வரோக நிவாரணி என்று ஏமாற்றப்படுகிறது. அப்படியே சுக்கும், மிளகும், மஞ்சளும். இப்போது யோசித்தால் சிந்தை தெளிவாகும். நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லிச் சொல்லியே செத்தும் கெடுத்தான் சிவனாண்டி போல் நம் சமூகத்தை அறிவியல் நோக்கி சிந்திக்க விடாமல் தடுத்து வைத்திருப்பதன் அரசியல் புரியும். நம்முடைய எண்ணம், சொல், செயலை பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளின் பெயரில் மழுங்கடித்து வரும் நிலை எவ்வளவு பிற்போக்குத் தனமானது என்பது புரியும். எதற்கெடுத்தாலும் பூச்சிக்கொல்லி எதிர்ப்பு, இயற்கை வேளாண்மை, மரம் நடுதல் என்பத இன்று புதிய சுற்றுச்சூழல் கொள்கைகளென வெகுஜனமக்கள் மத்தியில் நம்ப வைக்கப்பட்டு நிலை பெற்றுவிட்டன. அதற்கு முத்தாய்ப்பாய் க.யோகானந்த் தன் அணிந்துரையில் கூறுவது எத்தனை தீர்க்கமான செய்தி என்பதைப் பாருங்கள்.. மனிதர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்தும் நுண்கிருமிகள் அவற்றின் ஒவ்வொரு தலைமுறையிலும் (இது சில வகைகளுக்கு நிமிடக் கணக்கில் கூட) மாற்றங்களைப் பெற்றுக் கொண்டே இருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பு (anti - biotic) மருந்துகள் காலம் செல்லச் செல்ல பயனளிக்காமல் போவதற்கு இம்மாற்றங்களே காரணம். அதனால் நாம் புதிய மருந்துகளை உருவாக்கும் தேவையும் ஏற்படுகிறது. பூச்சிக் கொல்லிகளுக்கு எதிராகப் பூச்சிகள் எதிர்ப்புத் திறனைப் பெறுவதும் அது போலத்தான். அக்கிருமிகளுக்கு ஏற்படும் இயற்கையான மாற்றங்கள்தான் பரிணாம மாற்றங்கள் (evalution) நிகழ்வதை நமக்கு நிகழ்காலத்தில் நிதர்சனமாகக் காட்டும் அத்தாட்சிகள். இந்நூலில் ச.முகமதுஅலி தரும் பிளாஸ்டிக் பற்றிய குறிப்பு. எதையும் பொறுப்பற்று, புரிதலற்று, விதிமுறைகள் மிகமிக மீறப்பட்டு, வீணடிக்கப்பட்டு என பிளாஸ்டிக்கை நம்மோடு மட்டுமில்லாது மற்ற உயிர்களனைத்தையும் பாதிக்கும் வண்ணம் பிளாஸ்டிக்கை வளரவிட்டு தற்போது ஒழிக்க முற்படுகிறோம். அதுவும் ஆரம்பநிலையே என்று வேதனையோடு வேதனையாக இன்னொரு குறிப்பையும் தருகிறார். சுத்தமானது, பாதுகாக்கப்பட்டது, தொற்று அல்லாதது என்று எல்லோராலும் நம்பப்பட்ட பாட்டில் நீர் குழாய் நீரைவிட நம்பகத்தன்மையது அல்ல என்கிறார். நாம் மேற்குறிப்பிட்ட இருவரின் கருத்தையும் உற்று நோக்குதல் வேண்டும். எல்லாவற்றிலும் மாற்றம் அடைந்து வரும் உடல் கூறுகளும் மனிதனும் தன்னுடைய அறிவைப் பெருக்கிக் கொள்ளாது, சிந்தனையை மழுங்கடிக்கும் செயல்களில் உழன்று கொண்டு, சகட்டு மேனிக்கு இயற்கையை பாழ்படுத்தியும் கண்மூடித்தனமாக விஞ்ஞான அறிவியலை எதிர்த்தும் வருகிறார்கள். விஞ்ஞான அறிவியல் கற்பனையின் எல்லைக்கு அப்பாற்பட்ட நிலைகளையெல்லாம் உண்மையென நிருபித்து வருகிறது. அத்தகைய விஞ்ஞான உலகை அனுபவித்துக் கொண்டே, திடீரென விழிப்பு பெற்றதைப் போல் பிளாஸ்டிக்கை ஒழிப்பது பற்றியும், பூச்சிக்கொல்லியின் விளைவுகளைப் பற்றியும், சாப விமோசனமாக மரம் நடுதலைப் பற்றியும் தொடர்ந்து கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள். இது போன்ற நவீன மூடநம்பிக்கைகளுக்குள் மூழ்கி கருத்தாடி வருபவர்களுக்கு சாலையோர மரங்கள், அயல் தாவரங்கள், உண்ணிச்செடி, ஆகாயத் தாமரை, தைல மரம், வேம்பு, மூலிகை, சிப்கோ இயக்கம், அபிகோ, பிளாஸ்டிக், வாத்துமடையன், சிரபுஞ்சி, இந்தியர்களுக்கு, நமது இந்தியா, தூய அறிவியல், பெரியார் போன்ற குறிப்புகளே சரியான சாட்டையடியாக அமைகின்றன. மேலும் பல்வேறு குறிப்புகள் அவர்களின் சிந்தையை தெளிவாக்கும் விதத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும், மக்களும் கங்கை நதியை காப்பாற்ற எடுத்து வரும் முயற்சியை நாம் அறிந்ததே. கங்கையை புனிதமாக்கியது ஆளும் அரசு சார்ந்தவர்களின் கொள்கையென்றால் அந்தப் புனிதத்தை மாசுபடுத்தியதும் அம்மக்கள்தானே! அதை விரிவான குறிப்புகள் மூலம் விளக்கி, இமயமலையில் உருவாகி அது கொல்கத்தாவில் வங்காள விரிகுடா கடலில் கலக்கும் வரை எங்கும் ஒரே குப்பை கழிவு மயம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அதோடு மட்டுமில்லாமல் ஏன் இமயமலையே குப்பை என்று தனது கைங்கரியம் குறிப்பில் நிலை நாட்டுகிறார். நாம் இயற்கையை ஒருவாறாக புரிந்து வைத்துள்ளமைக்கு மாறாக பலவாறாக உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். அதற்குச் சான்றாக அவரின் பார்வையே இங்கு முன் வைக்கலாம். வட இந்திய ஆறுகளான கங்கை, சிந்து, பிரமபுத்திரா, யமுனை, கென், சட்லெஜ் போன்ற ஆறுகளைவிட தென்னக நதிகளான காவிரி, மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி போன்றவையே மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை. ஏனெனில் வட இந்திய ஆறுகள் யாவும் இமயமலையின் பனி உருகுவதால் ஏற்பட்டன. ஆனால் தென்னிந்திய நதிகள் யாவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இயற்கையான ஊற்றுகளில் உருவானவை. எனவே இவையே காப்பாற்றப்பட வேண்டிய ஆறுகளில் முதன்மையானவையாகும். மேலும் அணை கட்டுதலும், நதிகளை இணைப்பதும் விவசாயிகளின் நலன் சார்ந்ததென்றாலும் இயற்கையியல் கூறுப்படி ச.முகமதுஅலி விமர்சனம் செய்வார். விவசாயிகளை, பழங்குடிகளை நேர் கொண்ட பார்வையில் எதிர்க்கும் துணிவு அவரைத் தவிர வேறு யாருக்கேனும் உள்ளதா என்றால் சந்தேகமே? இயற்கை விரும்பிகள் எப்படி இருக்க வேண்டும்? அவர் கூறுகிற பல்வேறு நிபந்தனைகளுடன் இன்றைய சூழலியலாளர்கள் உள்ளார்களா என்றால் கேள்விக்குறிதான். உழைப்பில் பிரதிபலன் பார்த்தால் தேவலாம். கருத்திலே பிரதிபலன் பார்க்கும் கூட்டம்தான் இங்கு அதிகமுண்டு. இயற்கை வரலாறு, காட்டுயிர் குறித்து எழுதிய, எழுதி வரும் எழுத்தாளர்களைப் பட்டியலிடுகிறார். மா.கிருஷ்ணன், தியோடர் பாஸ்கரன், பி.எல்.சாமி, மு.வரதராசன், சேவியர் தனிநாயகம், எம்.ஏ.பாட்சா, ஆர்.பி.ஸ்ரீநிவாச ரெட்டி, ஜே.மங்கலராஜ், ச.பாலகதிரேசன். இவர்களில் தனிப்பெரும் எதிர்ப்பு அடையாளமாக ச.முகமது அலியையே குறிப்பிட முடியும். புத்தர், ராமானுஜர், சித்தர்கள், வள்ளலார், பெரியார் போன்றோர் முற்போக்கு மரபிற்கு அடையாளமாக விளங்கியவர்கள். இன்று தமிழகத்தில் சூழலியலில் முற்போக்கு மரபாக ச.முகமதுஅலி இயங்கி வருவதை எவரும் மறுத்துவிட இயலாது. இயற்கை செய்திகள் சிந்தனைகள் நூலில் வரும் ஒவ்வொரு செய்தியும் ஒரு தேர்ந்த குறிப்பாகி விடுவதால் சிந்தனைக் கருத்துக்களை வாசிப்பது போன்றே ஒன்றிவிட முடிகிறது. அதுவே இந்நூலின் பலம். மற்றபடி இந்நூல் அறிவியலில் உள்ள பல்வேறு இயல்களைப் பற்றி அறிந்து தெளிந்து கொள்வதற்கு அவசிய நூலாகவும் முன்னுதாரண முதல் நூலாகவும் விளங்குகிறது. இயற்கை என்றதுமே பச்சைல் புல், மரங்களடர்ந்த காட்சி நினைவுக்கு வருவது மட்டுமல்ல மாறாக பஞ்ச பூதங்களற்ற கோள்களின் காட்சிகளும் இயற்கைதான். அதைப் பஞ்ச பூதங்கள் அடங்கிய இப்பூமியில் இயற்கையை பல்லுயிரியம் என்று அழைக்கலாம். நாம். ச.முகமதுஅலியின் பல்லுயிரியம் நூலை வாசிக்கும் போது பஞ்ச பூதங்களைப் பற்றிய தெளிவும், ஏன்? எப்படி?, எதற்கு? என்ற கேள்விக் கணைகள் உருவாக உந்துதல் பெறவும் பல்லுயிரியம் நூலே பேருதவியாக அமையும். அந்நூல் 2000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்நூலை வைத்திருப்பவர்களே நாளைய சூழல் தொடர்பாக இயங்கவிருக்கும் முற்போக்குத் தலைமுறைகளாக இருப்பார்கள் என்பது திண்ணம்.

Comments

Popular posts from this blog

திருநெல்வேலிப் புள்ளினங்கள்

திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்கான அனைத்து உடைமைகளையும் எடுத்து தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். அவன் ரயில் ஜன்னலை குனிந்து பார்த்தவாறே நடை மேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து எனக்கு எதிர் திசையில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன். அமர்ந்தான். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. எத்தனையாவது படிக்கிற என்றேன். 11 வது என்றான். திருநெல்வேலின்னா உடனே உனக்கு என்னென்னலாம் ஞாபகம் வரும்னு கேட்டேன். அல்வா என்றான். இந்த பதில் மனிதனுக்கு முதல் தேவை உணவு என்பதைப் போல் இருந்தது. எவ்வுயிரினத்திற்கும் அடிப்படை உணவு. ஆனால் மனிதனுக்கோ அது சுவையோடு பிண்ணிப் பிணைந்தது. உணவுக் கலை ஒன்றே மனிதனோடு காலந்தோறும் கூடவே வருவது. ஓர் உணவு ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் என்கிற வகையில் அவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது எனில் அது உலகளவில் கவனம் பெறக்கூடிய நிலையை அடைகிறது. மற்றும் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு சேர்க்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பது ...

அறிமுகம்

குழந்தைகள் வரையும் ஓவியத்தை உற்று நோக்கினால், பறவைகள் சில பறந்து கொண்டிருக்கும், மலைகள் முக்கோணமாக உயர்ந்திருக்கும், நதிகள் நீல வண்ணத்தில் தீட்டப்பட்டிருக்கும். இவற்றிலெல்லாம் ஏதோவொரு ஒழுங்கு மறைந்திருக்கும். ஆனால் பச்சை நிறத்தில் மரங்களும் செடிகளும் கொடிகளுமென காடுகள் ஒழுங்கற்று கிறுக்கப்பட்டிருக்கும். இந்த பூமி குழந்தைகள் வரைகிற ஓவியமாக பத்திரப்படுத்தப்பட வேண்டுமென்பது வாழை குமார் போன்ற சூழலியலாளர்களின் அக்கறை. - கவிஞர். சக்திஜோதி